இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Tuesday 31 December, 2019

மார்கழி வெண்பா - 15 - கூட சதுர்த்தம்

#மார்கழி 15

பாருழற்றும் வித்தைப் பருத்தலற வற்றச்செய்
தாரிருவர் பாதத் தவவலியால் - சேரின்றெம்
பத்தும் பிணிநெஞ்சே பந்தமறு வந்தரந்து
பாவிருவர் பாதம் பணிந்து!

(பலவிகற்ப நேரிசை வெண்பா; கூடசதுர்த்தம்)

பதம் பிரித்து:

பார் உழற்றும் வித்தை பருத்தல் அற வற்ற செய்தார்
இருவர் பாத தவ வலியால் - சேர் இன்று எம்
பத்தும் பிணி நெஞ்சே பந்தம் அறு அந்தரத்து
பாவு இருவர் பாதம் பணிந்து.

பொருள்:
இவ்வுலக வாழ்வில் (பார்) [மீண்டும் மீண்டும் பிறந்து] துன்புற (உழற்றும்) [காரணமாக இருக்கும்] விதை போன்ற (வித்தை; வித்து = விதை) [வினையை] வளர்தல் இன்றி (பருத்தல் அற) தமது திருவடிகளின் (பாத) தவவலிமையால் (தவ வலியால்) தீரும்படி செய்தார் (வற்றச் செய்தார்) மாணிக்கவாசகரும் ஆண்டாளும் (இருவர்);
பாசத்திற்கு ஆட்பட்ட (பத்தும்; பத்து = பற்று = பாசம்) என் துன்பமிகு நெஞ்சே (பிணி நெஞ்சே; ;பிணி = துன்பம்), பற்று (பந்தம்) விட்டதாகிய (அறு) முத்தியில் (அந்தரம்) பொருந்தியிருக்கும் (பாவு) இருவரின் திருப்பாதங்களை (பாதம்) வணங்கி (பணிந்து) இன்றே (இன்று) அடை (சேர்).


கருத்து:
பிறவிக் கடலில் மீண்டுமீண்டும் சேர்க்கும் விதை போன்றதான வினையை வற்றச் செய்த இருவரை, அவர் பாதம் பணிந்து இன்றே அடை, என் நெஞ்சமே எ-று.

கூட சதுர்த்தம்:
கூடம் = மறை (இரகசியம்), சதுர்த்தம் = நான்காமானது (இங்கே நான்காமடியான ஈற்றடியைக் குறிக்கும்).
பாடலின் ஈற்றடியிலுள்ள எழுத்துகள் மற்ற மூன்றடிகளில் பொதியுமாறு அமைத்தல் ‘கூட சதுர்த்தம்’ ஆகும்.
இப்பாவின் ஈற்றடி எழுத்துகள் மொழிமுதலாவன சீர்முதலிலும் ஆகாதான இடையிலும் கடையிலும் சீருக்கொன்றாய் ஏனைய மூவடிகளிலும் அமைந்துள்ளதைக் கண்டுகொள்க. (படத்தில் அவை வேறு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன).

இனிய காலை வணக்கம்...

நன்றி.

(C)2019, Vennkotran.

1 comment:

  1. மிக நன்றாக வெண்பா இயற்றி உள்ளீர்கள். நன்று. வாழ்க! புதிதாக தெரிந்து கொள்ள பல செய்திகள் உள்ளன.

    ReplyDelete