இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Thursday 26 December, 2019

மார்கழி வெண்பா - 9 - வல்லினப்பா

#மார்கழி 9

சித்தத் துறைதபச் சத்தைக் கொடுத்திதப்
பத்தைச் சிதைத்திடப் பத்தைக் கொடுதுதித்
திட்டைப் படிகடை தித்திப் புறப்படைத்
திட்டச் சகத்தடி செப்பு!

(இன்னிசை வெண்பா; வல்லினப்பா; சந்தப்பாவும் ஆம்!)

பதம் பிரித்து:

சித்தத்து உறை தப சத்தை கொடுத்து இத
பத்தை சிதைத்திட பத்தை* கொடு துதித்து
இட்டை படி கடை தித்திப்பு உற படைத்திட்ட
சகத்து அடி செப்பு

*சிவனுக்கு: ‘சிதைத்து இட(ப்)பத்தைக் கொடு’ என்றும்
திருமாலுக்கு: ‘சிதைத்திடப் பத்தைக் கொடு’ என்றும் நிற்கும்.

‘இடபத்தைக் கொடு’ - காளையூர்தி கொண்டு (இடபம் = ‘ரிஷபம்’ என்பதன் தற்பவம், ‘கொண்டு’ என்பது ‘கொடு’ என்று நின்றது குறுக்கல் விகாரம்)
’பத்தைக் கொடு’ - பத்து அவதாரங்களைக் கொண்டு... என்று பொருள் கொள்க. இது சிவனுக்கும் திருமாலுக்கும் இரட்டுற மொழியப்பட்டது!

ஆழ்மனத்தில் (சித்தம் - சித்தத்து) உறைகின்ற [இறைவன்], தவஞ்செய்வதற்கான தெம்பை (சத்து) கொடுத்து,
[இவ்வுலக வாழ்வின் மீதான] இன்பமிகு (இத) பத்தை (பற்றை) சிதைத்திட |(சிவன்:) இடப வாகனம் மீதேறியும் / (திருமால்:) பத்து அவதாரங்கள் கொண்டும்| (வரும்படியும்)
துதித்து (வணங்கி நிற்கும் யான்; ‘துதித்த’ என்பது ‘துதித்து’ என்று மருவி நின்றது!) விரும்பியபடி (இட்டைப்படி; ‘இஷ்டம்’ - இட்டை என்று நின்றது தற்பவம்) வீடுபேற்றை (கடை) இனிதாக (தித்திப்பு) அடையும்படியும் (உற) பாக்கள் படைத்தருளிய (படைத்திட்ட)
(எனக்கு) உலகம் போன்றோரது (சகம் - சகத்து)  திருவடிகளை (அடி) போற்று (செப்பு) எ-று.

பொழிப்பு: ‘இனிது’ என்று எண்ணி மயங்கும் இவ்வுலக வாழ்வின் பற்றைச் சிதைக்கவும், தபத்திற்கான வலிமையை அருளவும் என் உளத்தில் வாழும் இறைவன் விடையேறியும், பத்து அவதாரங்கள் கொண்டும் வந்து எனக்கருளி, நான் விரும்பியபடி வீடு பேற்றை இனிதாய் அருளும்படிக்கு உதவுகின்ற பாக்களைப் படைத்தளித்த, எனக்கு உலகம் போன்றவர்களான மாணிக்கவாசகர் & ஆண்டாள் ஆகியோரின் திருவடிகளைப் போற்றுக!

‘மாணிக்கவாசகர் & ஆண்டாளின் பாக்களைப் படிப்பதன் மூலம் தவவலிமையும், பாச நாசமும், வீடுபேறும் எளிதில் கிட்டும்’ என்பது கருத்து. இதை ‘நெஞ்சுக்கு உரைத்தது’ என்றும் கொள்ளலாம்! (’செப்பு’ என்ற முன்னிலை ஏவல் நெஞ்சை நோக்கியது! எதிர் நிற்கும் அன்பரை நோக்கி ஆற்றுப்படுத்தியதாகவும் கொள்ளலாம்!)

’வல்லினப்பா’ என்பது வல்லெழுத்துகளான க், ச், ட், த், ப், ற் ஆகிய மெய்களையும் அவற்றின் உயிர்மெய் வரிசை எழுத்துகளை மட்டுமே கொண்டு அமைவது. பாவில் சந்தக்குழிப்பு அமைந்ததை வாய்விட்டுச் சொல்லி அறிக!

நன்றி!

No comments:

Post a Comment