இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Saturday 30 October, 2010

மழையில் நனைந்த கவி...

[நேற்றைக்குப் பொழிந்த மழை தந்த பரிசுகள் இரண்டு - இந்தக் கவிதைகள் & ஜலதோஷம் :-) முன்னதை மட்டும் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்!]

இருண்ட முற்பகலின்
மெல்லிய தூறலில் நனைந்த
குளிர்ந்த காற்று
சன்னலைத் திறக்கையிலெல்லாம்
திறக்கிறது
என் மனதையும்...

துவங்கிய மழையைக் கண்ட
எல்லாப் பறவைகளும்
ஒதுங்க இடம் தேடத்
தான் மட்டும் தன்
சிறகுகளை விரித்துக்கொண்டு கிளம்புகிறது
என் மனது...



வாழ்க்கைக் கூத்திற்குப் போட்ட
அத்தனை வேஷங்களையும்
கரைத்துக் கழுவி
என்னை ‘நான்’ ஆக்குகிறது
என்னை நனைத்த மழை!

மழையைக் கண்டவுடன்
நனைவதற்காக
எனக்கு முன் ஓடுகிறான்
எனக்குள் இருக்கும் சிறுவன்...
அக்கறையான அம்மாவைப் போல்
அவன் கையைப் பிடித்துத் தடுக்கிறது
வளர்ந்துவிட்டதன் தயக்கம்!

நின்ற மழையோடு
நின்று விட்டன கவிதைகளும்
மழையில் கழுவப்பட்ட
மரங்களின் பச்சையாய்
மிச்சமிருக்கிறது மனதில்
மிளிரும் மகிழ்ச்சி...

Saturday 23 October, 2010

தமிழ்த்தேனிக்கு வாழ்த்து

அண்ணா நகர் தமிழ்ப்பேரவை
சென்னை.
09-10-2010

திருக்குறள் பரப்புனர், தமிழ்த்தேனி


புலவர். சா. அந்தோணி சாமி
அவர்களுக்கு

வாழ்த்துப்பாக்கள்

    ”திருக்குறள் பரப்புனர்” என்ற அடைமொழியுடன் ஒரு மனிதரைச் சந்தித்ததில் நான் பெரிதும் மகிழ்ந்தேன். அவர் மக்கள் திரளாகக் கூடும் பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களுக்கு விடுமுறை நாட்களில் எல்லாம் சென்று கையில் ஒலிபெருக்கியுடன் திருக்குறளின் அருமை பெருமைகளைச் சொல்லி, ’திருக்குறளைப் படியுங்கள்!’ என்று அறிவுறுத்தும் பணியைச் செய்து வருகிறார் எனத் தெரிந்து கொள்ளும் பொழுதில் எந்த உணர்வுடைய தமிழனால்தான் அவரைப் பாராட்டாமல் இருக்க இயலும்?


    அவரைப் பாராட்டுவதோடு நின்று விடாமல், அவரது உயர்பணிக்கு நாமும் நம்மால் ஆன உதவியைச் செய்து, திருக்குறளைக் கற்று–கற்பித்து வாழ்வில் சிறப்போம் என திருவள்ளுவனாரின் பொற்பாதங்களைத் துணையாகப் பற்றி வேண்டுகிறேன். நன்றி! [திருக்குறள் பரப்புனர் புலவர். சா. அந்தோனி சாமி அவர்களின் கைப்பேசி எண் : 90432 18568]
   

இயற்கும்மி

முப்பாலில் நம்வாழ்வைச் சீராக்கவே – திரு
வள்ளுவனார் தந்தார் குறளெனவே
எப்போழ்தும் இன்னூலின் மாண்புணர்ந்தே – அதை
எல்லோரும் கற்கென கும்மியடி!           

என்றென்றும் குன்றாத சீர்கொண்டதே – குறள்
எம்மக்கள் இன்றோ அதைமறந்தார்
இன்றந்த மாயையைப் போக்கிடவே – தமிழ்த்
தேனியும் வந்ததே; கும்மியடி!           

வாழ்வுறு மேயினி வாழ்வுறுமே – குறள்
கற்றென் இனமது வாழ்வுறுமே
தாழ்விலை யேயினி தாழ்விலையே – தமிழ்த்
தாய்க்கிவ் வுலகினில்; கும்மியடி!       


சமனிலைச் சிந்து

பாரினில் உயர்மொழி தமிழே – இதைப்
    பாவமென் மக்களுணர்ந் திலரே,
சீர்மிகும் சிறப்பினுக் கெல்லை – புகழ்
    திருக்குறள் நூல்பெற்றது அன்றோ?
”யாரிதை இன்னாளில் கற்பர்?” – எனல்
    யாவர்க்கும் மடமையே என்பேன்!
வேரினை அறுத்தெறிந் திட்டே – செடி
    மண்ணில் நிலைபெறல் உண்டோ?       


இருளொடு சேர்ந்ததெம் அறிவு – அதை
    இகல்வெல்ல இருப்பதோர் நூலே,
திருக்குறள் என்பதவ் வொளியே – புவி
    திகழ்ந்திட திறம்தரும் கதிரே!
மருள்மறைந் தென்னினம் ஓங்க – புகழ்
    முழுமையும் அடைந்துயாம் வாழ
ஒருதமிழ்த் தேனியும் உண்டே – அதன்
    உயர்பணி குறள்பரப் புதலே!           


வாழ்கவத் தேனியும் வாழ்க – அதன்
    வாழ்வுயர்த் தும்பணி வாழ்க!
வாழ்கநல் குறளதும் வாழ்க – புவி
    வாழநல் புகழொடு வாழ்க!
வாழ்கநம் தாய்த்தமிழ் வாழ்க – அவள்
    மலரடி வாழ்த்திட வாழ்க!
வாழ்கவென் இனத்தவர் எல்லாம் – இனி
    வீழ்விலை உயர்வதே! வாழ்க!!           

அன்புடனும் பணிவுடனும்,
கா. விஜயநரசிம்மன்

Tuesday 12 October, 2010

காதல் தேர்தலுக்கான பிரசாரம்

(என்னவள் என் காதலை ஏற்றுக் கொள்ளாத நிலையில், அவள் அதை ஏற்க வேண்டி பாடப்பட்டது)

வாக்களிப்பீர்! வாக்களிப்பீர்!
கன்னி மனதின் காரணங்களே! என்
காதல் கனிந்திட வாக்களிப்பீர்!

வாக்குறுதி பல தந்து
வாக்கு வாங்கும் விளையாட்டல்ல
காதல் என்ற போதும்
களத்தில் இறங்கிவிட்டேன்
களைத்து நான் போகமாட்டேன்!

போட்டியென்று யாருமில்லை!
அன்னபோஸ்டில் வெற்றி யில்லை!
கன்னியவள் கரைய வில்லை, எனக்கோ
காதல் ஓட்டு போடவில்லை!

தேர்தல் இவள் நடத்தவில்லை, என்னை
தேர்ந்தேடுக்க சொல்லுங்கள்,
என் காதல் வாக்குமூலம்தனை
கேட்டுவிட்டு செல்லுங்கள்!

காதலிதன் நெஞ்சமே நீ என்
கனவுதனை அறியாயோ!
காத்திருப்பேன் காத்திருப்பேன், எனக்காய்
கரைந்து வாக்கை இடுவாயோ?

இதயமென்னும் தொகுதியே என்
இனிய ஆட்சி வேண்டாயோ? என்மேல்
இரக்கமின்றி இருக்கின்றாள்,
இவள் சிந்தை மாற செய்வாயோ?

கண்களெனும் மீன்களே, என் பார்வை
கடலில் நீந்தித் திளைத்தீரே!
காதல் தேர்தல் களம் நிற்கின்றேன்
கனிந்து உங்கள் ஓட்டை தாரீரோ!

இதழென்னும் பூவேயுன்
சுவையறியும் இதம் பற்றி
ஐந்தாண்டு திட்டமொன்றும்
அதற்கு மேலும் திட்டம் போட்டேன்,

இறுகி இருந்து கொள்ளாதே,
இவளைப் போல் நீயுமெனை கொல்லாதே!
இன்னும் என்ன நான் கேட்க!
இளகி எனக்கு வாக்கிடுவாய்!

நீங்களெல்லாம் நியாயம் அலசி, வாக்கிட்டு
நான் வெற்றிப் பெற்று ஆட்சியமைக்க
நாட்கள் பல ஆகுமென்றால்,
நேரடியாய் கேட்டுக் கொள்கிறேன்
என் ஆளுனர் என்னவளிடம்...

உன்னைப் பார்த்தவன்று என்னுள்
பரவித்திரிந்த பட்டாம் பூச்சிகளை நீகேள்,
அன்று முதல் இன்றுவரை வளர்ந்த
காதலின் கதையை அவை சொல்லும்!

பொழுது போகவல்ல, எனக்கு
வாழ்ந்து போக வேண்டும் நீ!
கண் நிறைத்துப் போனவள் அல்ல, என்
கருத்தில் நிறைந்து நின்றவள் நீ!

கொஞ்சம் என் தாயாய்,
கொஞ்சம் என் தோழியாய்,
நிறைய என் காதலாய்
நெஞ்சில், வாழ்வில் நிறைய வேண்டும் நீ!

காதல் எனக்கு இல்லையென்று,
கல்யாணம் வீண் தொல்லையென்று
காத்திருப்பவன் கலக்கமுற, நின்
கருத்துரைத்துப் போனாய் நீ...

பகல் உணர்த்தும் இரவாய்,
இரவை உணர்த்தும் பகலாய்,
குளிர் உணர்த்தும் தணலாய்,
தணலை உணர்த்தும் குளிராய்,

என்னை உணர்த்த நீயென்று
உண்மை உணர்ந்து கொள்வாயோ?
காதல் என்னும் கருவி கொண்டு
உன்னை என்னால் உணர்வாயோ!

கணவனாய் இருந்து உனக்கு
காதலை எவ்வாறு தருவேன் என்று
கணக்கிட்டே நான் பட்டியல் தந்தால்
காதல் தேர்தல் ஆகிவிடும்!

ஆனதுதான் ஆகியது,
அதையும் தான் தருகின்றேன்,
கேட்டுவிட்டே என்னவளே, உன்
காதல் ஓட்டை எனக்கேயிடு!

எதை சொல்லி தொடங்க என்
காதல் வாக்கு உறுதிகளை!
இறுதிவரை என்றே நம்பி
இலட்சம் கோடி ஆசைகள் வைத்தேன்!

காலை தொடங்கி மாலை வரை
நித்தம் நூறு பூக்கள் தரவும்,
சத்தம் மின்றி பின்னால் வந்து
முத்தம் நூறா யிரம் தரவும்
திட்டம் போட்ட சின்ன சில்மிஷங்களின்
சட்டம் போட்டே செய்வேன் ஆட்சி!

உன்னோடு கடல் கரை நடக்க,
கண்ணோடு கையும்கோர்த்து மழை நனைய,
கருத்தின்றி பேசியே காலம் கழிக்க,
காதலிக்கிறேன் உன்னை யென்று
காதில் சொல்ல கற்பனை பல வளர்த்தேன்,
கவிதையாய் வாழ, கவிதையோடு வாழ!

குலோத்துங்க சோழன் குலம் ஆராய,
பல்லவன் படையெடுப்பின் பலம் அலச
பாண்டியன் பற்றி யென்று புத்தகம் பல
பார்த்து வைத்துள்ளேன் உன்னோடு சேர்ந்து படிக்க!

பழந்தமிழர் புகழ் படிக்கும் ஆவலொரு
பக்கமென்றால், காதலி உன்னோடிதை
பகிர்வதில் சுகமெனக்கு, உண்மையிதை
பகிர்ந்துவிட்டேன், பொறுத்தருள்வாள் தமிழென்னை!

எனக்கென்றே நான் எண்ணுவதாய்
எண்ணாதே! உறாவாடும் உயிரேயுன்
இலட்சியங்கள் நானறிவேன், அவையாவும்
ஈடேற இடர்களைந்து உடன் நிற்பேன்!

இயன்ற வரை இயம்பிவிட்டேன்,
இன்னும் இன்னும் இருக்கிறது!
கேட்டவரை, கருத்தில் என்
காதல் உனக்கு புரிந்தால்
எனக்கே உன் வாக்கிடு, எனக்காய்
இதய வாசல்தனை திறந்திடு!

இலட்சம் கோடி பேர் இல்லை,
உன் ஒருத்தி ஓட்டு தான் இங்கு,
வெற்றி தோல்வி என்றில்லை,
போட்டி நிற்க ஆளில்லை!

வாக்களிப்பாய் வாழ்க்கைக்கு
இதயத் தொகுதி தேர்தலில்
ஆட்சி எனது
ஆளுமை உனது!