இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Monday 30 December, 2019

மார்கழி வெண்பா - 14 - ஏகநாகபந்தம்

#மார்கழி 14

பண்ணாரும் வேதம் பகர்கவரும் வேளும்மாய்க்
கண்ணாரை வவ்வமெய்க் கண்ணாரை - வீரர்தேடு*
தேவின் விரைவீதார் சூடுந் திருப்பாவைத்
தாளதாக திர்ப்பாவை மண்ணு!

(இன்னிசை வெண்பா; ஏகநாகபந்தம்)

பதம்பிரித்து:

பண் ஆரும் வேதம் பகர், கவரும் வேளும் மாய்
கண்ணாரை வவ்வ மெய்க்கு அண்ணாரை - வீரர் தேடு
தேவின் விரை வீ தார் சூடும் திருப்பாவைத்
தாள் அது ஆ, கதிர் பாவை மண்ணு.

பொருள்:
இசையோடு பொருந்திய (பண்ணாரும்) தமிழ் மறையை (வேதம்) உரைத்த (பகர்),
[பாசத்திற்கு] ஈர்க்கின்ற (கவரும்) மன்மதன் (வேளும்) இறக்கும்படி (மாய்) [தீய்க்கின்ற] கண்ணை உடையவரை (கண்ணாரை) பற்றுவதான (வவ்வ) உண்மைப் பொருளுக்கு (மெய்க்கு) தலையாய வழியானவரின் (அண்ணாரை = மாணிக்கவாசகரை),
[தவமாகிய] வீரம் உடையவர்கள் (வீரர்) காண விழையும் (தேடு) இறைவனின் (தேவின்) நறுமணமிக்க (விரை) மலர் (வீ) மாலையை (தார்) சூடுகின்ற தெய்வப்பெண்ணின் (திருப்பாவை = ஆண்டாள்)
திருவடிகளில் சேர்ந்திருக்க (தாளது ஆ[க]) [அவர்கள் அருளிய] ஒளிமிக்க (கதிர்) பாடல்களில் (பாவை) மூழ்கு (மண்ணு).


பொழிப்பு: மன்மதனை எரித்த கண்ணரான சிவனைப் பற்றுவதான உண்மைக்கு தலைமையானவரும், இசை பொருந்திய தமிழ் மறைகளைப் உரைத்தவருமான மாணிக்கவாசகரையும், தவமுடையோர் தேடும் இறைவனான திருமாலின் மாலையைச் சூடிய தெய்வப்பெண்ணான ஆண்டாளையும் திருவடி சரணம் எய்த அவர்கள் அருளிச் சென்ற ஒளிமிக்க பாக்களில் மூழ்குக எ-று.

இவர்கள் அருளிய தமிழ்மறைகளான திருமுறையும் திவ்வியபிரபந்தமும் இசைப்பாக்களானமையால் ‘பண்ணாரும் வேதம்’ எனப்பட்டன.
‘பண்ணாரும் வேதம் பகர்’ என்பதும், ‘தாளதா’ என்பதும் இருவருக்குமே நிற்கும்.

தவமுடையாரை ’வீரர்’ என்றது அத்தவத்தின் அருமை கருதியாம். திருக்குறளின் ‘தவம்’ என்ற அதிகாரத்தைக் காண்க!

*வீரர்தேடு - இது பூச்சீராகாதோ எனின் ஆகாது. வல்லினமுன் நின்ற ரகரவொற்றைக் கழித்தலகிட இது காய்ச்சீராகும், அல்லது, தளைசிதையுமிடத்து குற்றுகரம் அலகிடப்படாது என்னும் விதிப்படிக் கொளினும் இது காய்ச்சீராகவே நின்று தளைசிதையாது.

ஏகநாகபந்தம்: ஒரு பாம்பின் உடலில் தலைமுதல் வால்வரை பொருந்த அமைப்பது. உடல் தன்மீது தானே குறுக்கிடும் இடங்களில் அமையும் எழுத்துகள் பொதுவாக நிற்க வேண்டும். இப்பா ஏகநாகபந்தமாய் அமைவதைப் படத்தில் காண்க!

இனிய காலை வணக்கம்...

நன்றி!

(C)2019, Vennkotran.

No comments:

Post a Comment