இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Wednesday 29 June, 2011

நீ நிரந்தரமானவன்... அழிவதில்லை!

[அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்]

எழுத்தெனும் மக்கள் கூட்டம் ஏறுசொல் வீரர் கூட்டம்
பழுதறு பாட்டின் படைகள் படுபொருள் ஆன சுற்றம்
இழையுநல் அணிகள் பெண்டிர் இகல்கடி அறநூல் அமைச்சர்
கெழுமிய செங்கோல் கொண்டு செந்தமிழ் கவியாள் வேந்தே!

உரமிகு தானை கொண்டு உலகினை முழுதாய் ஆள
அரசரும் விழைந்த துண்டு அதுஅவர்க் கான தில்லை
தரமிகு தமிழின் பாவால் தரணியை முழுதாய் ஆளும்
வரமதைப் பெற்றாய் நீயே! வரகவிக் கொற்றன் நீயே!

சூழலைச் சொன்ன நொடியில் சுவைபடப் பாடல் தருவாய்க்
கூழைமை கொள்ளாய் யார்க்கும் குனிந்துநீ பணிந்து நில்லாய்
ஏழைக்கும் புரியும் இனிய எளியபல் பாக்கள் கொண்ட
பேழைநீ! கவியே உந்தன் பெருமைக்கும் அளவொன் றுண்டே?

திரைப்பட உலகில் மற்றும் சிறப்புறு கவிதை உலகில்
துருவநன் மீனாய் ஒளிரும் சுடர்கவி கண்ண தாச!
இருந்தவர் இருப்போர் வருவோர் இதயங்கள் தானாள் வதனால்
நிரந்தரம் ஆனாய் நீயே! நித்தியக் கவியால் நீயே!



[எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய சந்த விருத்தம்]

தேனொழுகும் பாக்கள்பல ஈன்றவனும் நீயே!
    சேருதிரைப் பேருலகில் ஓர்துருவன் நீயே!
வானொழுகுங் கூறுபுகழ் சேர்த்தவனும் நீயே!
    மாபொருள்கள் நேர்பலநூல் யாத்தவனும் நீயே!
தானொழுகும் தீக்குணத்தை மீறியவன் நீயே!
    தாய்த்தமிழ்க்காய்ப் பாய்ரயிலின் கீழ்படுத்தாய் நீயே!
ஊனொழுகும் உடல்நீப்பின் உனக்குண்டோ மரணம்?
    உள்ளங்களில் நிரந்தரமாய் உறைபவனும் நீயே!

[’தான்’ ஒழுகும் தீக்குணம் – ’ஆணவம்’]

குறிப்பு: 12/06/2011 அன்று சென்னை அண்ணா சாலை மைய நூலகச் சிற்றரங்கில் கவியரசர் கண்ணதாசரின் பிறந்தநாளை ஒட்டி ”கவிஓவியா” இதழும் “கண்ணதாசன் கலை இலக்கிய மன்றமும்” இணைந்து நடத்திய கவியரங்கில் முதல் பரிசைப் பெற்ற கவிதை. அவ்விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கும் எம் கவிதையைப் பரிசுக்குத் தேர்வு செய்தவர்களுக்கும் இவண் இன் நன்றிகளைப் பதிக்கிறேன்.

Thursday 24 March, 2011

மருந்து



எட்டுமணி நேர வேலை
ஏற்படுத்தியிருந்த எரிச்சல்,

காலம் காவாப் பேருந்திற்காய்க்
காத்திருந்ததன் கால்கடுப்பு,

வந்த வண்டியும் கூட்டம்
வழிந்திட வந்ததின் வெறுப்பு,

நிம்மதியாய் நிற்கக்கூட விடாமல்
நெறிக்கப்படுவதின் நெஞ்சுக்கொதிப்பு,

கடந்து போகையில் கால் மிதித்துவிட்டுக்
கண்டு கொள்ளாதவன் மீதான கோவம்,

சாலை நெரிசலில் சவலை மாடாய் வண்டி
தள்ளாடி நகர்வதனாலாய தலைவலி,

இத்தனையும்
இத்தனையும்

மாயமாய் மறைந்தன –

அறிமுகமே இல்லாத
அந்தக் குழந்தையின்
பால்முகம் வீசிய
பச்சைப் புன்னகையால்!

Monday 14 March, 2011

கல்லூரிப் பிரிவு

காலண்டரைக்
கிழிக்காமல் வைத்த
என் கடைசி முயற்சியும்
தோற்றுப்போனது – வந்துவிட்டதே
நாம் பிரியப்போகும்
இந்த நாள்!

நிறத்திற்கு ஒன்றாய் மிட்டாய்கள்,
கைத்தட்டும் குரங்கு பொம்மை,
அஷ்டகோணலான அப்பாவின் முகம்,
எதற்கும் சமாதானமாகாமல்
தாய் தேடும் குழந்தையாய்
தேடிக்கொண்டிருப்பேன் உன்னை
என்றாவது ஒருநாள்
என் வாழ்க்கையில்...

பிடித்த பாடல் பிரதிபலிக்கும்
உன் நினைவின்  தாக்கத்தில்
என் இதழ் தோன்றும்
நொடிப்புன்னகைக் கேட்கிறது
“என்று சந்திப்பேன்
மீண்டும் உன்னை?” என்று!

நீ இரவல் வாங்கிய
என் புத்தகம்,
நான் திருப்பித் தராத
உன் பேனா,
வானொலியில் கசியும்
உனக்குப் பிடித்த பாடல்,
நோட்டின் ஓரத்தில்
கிறுக்கிய பெயர்கள்,
சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்,
என் கைப்பேசியில் பூக்குமுன்
“நல்லிரவு” குறுஞ்செய்தி...
ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது
உன்னை எனக்கு நினைவூட்ட...

பிரிவுக்குத் தயாரானேன்
நினைவுகளை டைரியில் பதித்து,
எவ்வளவுதான் எழுதினாலும்
இடமிருக்கிறது இன்னும்
எழுத முடியாதவற்றை எழுத!

என்றோ எதையோ
தேடும் பொழுதில்
கிடைப்பதற்காகவே வைத்திருப்பேன்
அலமாரி புத்தகத்தின் நடுவில்
நண்பா, நம் புகைப்படத்தை...

எதிர்பாராத தொலைப்பேசி அழைப்போ
யதேச்சையான வழிப்பாதைச் சந்திப்போ
ஒரு நண்பன் போதுமே – தொட்டுத் தொட்டு
அனைவரின் நினைவையும் அசைபோட;
இரயில் பெட்டிகளாய் இணைந்த நினைவுகள்!

Wednesday 26 January, 2011

எனது குடியரசு நாள் செய்தி

குடியரசு அல்லது மக்களாட்சி – உலகின் மிகப்பெரிய மக்களாட்சிதான் அது எப்படி அமையக் கூடாது என்பதற்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது... பொய்களைச் சொல்லிக்கொண்டு போலியாய் கொண்டாடுவதைவிட உண்மைகளை ஒப்புக்கொண்டு எதிர்காலத்திலாவது தவறுகளைச் சரி செய்துகொள்வது சிறந்தது என்பது என் கருத்து!

குடியரசு அல்லது மக்களாட்சி என்றதும் நம்மில் பலருக்கு நினைவிற்கு வருவது “சுதந்திரம்” என்ற சொல்தான், குமுகாயப் (சமுதாயப்) பார்வையில் இந்தச் சொல்லின் பொருள் தவறாகவே கொள்ளப்படுகிறது... எது சுதந்திரம்? ஒரு தனிமனிதனோ அல்லது குழுவோ அல்லது நிறுவனமோ தான் நினைத்த எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதா? தன் கடமைகளை முற்றிலும் மறந்துவிட்டு உரிமைகளை மட்டும் இம்மியளவும் குறைவிலாமல் பெற விழைவதா? நிச்சயம் இல்லை!

நண்பர்களே, இந்தியர்களே, குடியரசின் உறுப்பினர்களே... உரிமைகளைக் கேட்கும் முன் கடமைகளைச் செய்து முடிப்போம், நாம் ஒரு பெரும் இயக்கத்தின் சிறு பகுதி என்பதை நினைவில் கொள்வோம், எத்துனை சிறியதானாலும் எத்துனை பெரியதானாலும் நமது பங்களிப்பு இல்லாது அந்தப் பெரிய இயக்கத்தால் சரிவர செயல்பட இயலாது என்பதை மனதில் கொள்வோம்...

வாய்வழியாக வயிற்றுக்கு அளிக்கப்படும் உணவுதான் பின் ஆற்றலாக கைக்கும் பிற உறுப்புக்களுக்கும் கிடைகிறது, வாய்க்கும் வயிற்றுக்கும் நான் ஏன் உணவைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கை நினைத்தால் இழப்பு அதற்கும்தானே? அது போலதான் ஒரு குமுகாயமும், அதன் உறுப்புகளான ஒவ்வொருவரும் அதற்கு அளிக்கும் பங்களிப்பு அவர்களுக்குத் திரும்பி வரும், நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ! நமக்கு கிடைத்த கிடைக்காத அனைத்துமே நம் பங்களிப்பின் பயன்தான் என்பதை உணர்வோம்...

உலகின் மிகப்பெரிய குடியரசு என்று மார்தட்டிக்கொள்ளும் முன் அது உலகின் மிகச் சிறந்ததூஉம் என்பதையும் உறுதி செய்து கொள்வோம்...

 இனிய குடியரசு நாள் வாழ்த்துகள்.... வெல்க குடியரசு! வாழ்க ஞாலம்!!