இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Thursday 26 December, 2019

மார்கழி வெண்பா - 10 - இடையினப்பா

#மார்கழி 10

வாவியுள வீவிரவு வாளை விரவியே
யாவியலை யாளை யியைவாரை - வீயைவளை
வேளையெரி வேவவிழி யேவு வரையரை
யாளுவழி யாரைவிழை வாய்! 

(நேரிசை வெண்பா; இடையினப்பா)

பதம்பிரித்து:

வாவி உள வீ விரவுவாளை விரவியே
ஆவி அலையாளை இயைவாரை - வீ ஐ வளை
வேளை எரி வேவ விழி ஏவு வரையரை
ஆளு வழியாரை விழைவாய்.

குளத்தில் (வாவி) உள்ள மலரில் (வீ) நிறைந்திருக்கும் சரசுவதியை (விரவுவாளை; விரவுதல் - கலத்தல்) சேர்ந்து [வணங்கி] (விரவியே)
அலைமகளா இலக்குமியை (அலையாளை) உயிரில் (ஆவி) சேர்க்கும் திருமாலையும் (இயைவாரை),
ஐந்து (ஐ) மலர்களால் (வீ) ஆன கணைதொடுக்க வில்லை வளைக்கும் (வளை) மன்மதனை (வேளை; வேள் - மன்மதன்) தீயில் (எரி) வெந்துபோகும்படி (வேவ; ‘வேக’ என்பது பேச்சுவழக்காய் ‘வேவ’ என்று நின்றது) தன் கண்ணின் (தீயை) (விழி) விடுத்த (ஏவு) இமயமலையில் வாழும் சிவனையும் (வரையர்; வரை - மலை, எனவே சிவன் ‘வரையர்’ எனப்பட்டார்)
[தம் பாக்களால்] ஆள்கின்ற (ஆளு) [நமக்கு வீடுபேறாகிய] வழியைத் தருவாரை (வழியாரை) [நெஞ்சே] நீ விரும்பு (விழைவாய்).

பொழிப்பு: குளத்தில் மலர்ந்திருக்கும் மலரில் உறையும் சரசுவதியை வேண்டி, தனது உயிராக இலக்குமியைக் கலக்கும் திருமாலை ஆளும் ஆண்டாளையும், ஐந்துமலர்க்கணைகளைத் தொடுக்க வில்லை வளைக்கும் மன்மதன் தீயில் வெந்துபோகும்படி தனது விழியின் சுடரை விடுக்கும் இமயத் தலைவரான சிவனை ஆளும் மாணிக்கவாசகரையும் மனமே, நீ கதியாக எண்ணி விரும்பி வணங்குக எ-று.

இடையின மெய்களான ய், ர், ல், வ், ழ், ள் ஆகியனவும் அவற்றின் வரிசையான உயிர்மெய்களும் மட்டுமே பயின்று வருவதால் இது ‘இடையினப்பா’ ஆயிற்று.

நன்றி!

(C) 2019, Vennkotran.

No comments:

Post a Comment