இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Sunday 29 December, 2019

மார்கழி வெண்பா - 13 - நான்காரைச் சக்கரபந்தம்

#மார்கழி 13

வாதமார் தேவைப் பணிந்தேசார் வாவாவார்
சாதேய்க்கும் போதடி கண்வாண் கடிதடையார்
போதமா வாழிதா வாதாழி வாமாறி
லேதமிது தேர்மாத வா!

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா; நான்காரைச்சக்கர பந்தம்)

பதம் பிரித்து:
வாதம் ஆர் தேவை பணிந்தே சார் வா; ஆவார்
சா தேய்க்கும் போது அடிகள் வாண் கடிது அடையார்,
போதம் மா ஆழி தாவாது ஆழி; வா மாறு இல்
ஏதம் இது தேர் மாது அவா!

பொருள்:
வாதவூரின் (வாதம் ஆர்) இறைவனை (தேவை = மாணிக்கவாசகர்) பணிந்து, சரணடைய (சார்) வா,
அவ்வாறு சேராதவர் (ஆவார் - ’ஆகார்’ என்பதன் திரிபு) எமன் (சா) வந்து விரட்டும் (தேய்க்கும்) பொழுதில் (போது) திருவடிகளான (அடிகள்) வீடுபேற்றை (வாண்) விரைந்து (கடிது) அடைய இயலாதவர் ( அடையார் ஆவார்);
ஞானமாகிய (போதம்) பெரிய (மா) கடலை (ஆழி) தாண்ட இயலாது (தாவாது) அதனுள் ஆழ்வர் (ஆழி),
வேறு பதிலி இல்லாத (மாறு இல்) துணை (ஏதம்) இதுவே என்று தெளி (தேர்), இத்தெய்வப் பெண்ணை (மாது = ஆண்டாள்) விரும்பிச் [சரண்டைய] (அவா) வா (வா).


பொழிப்பு:
வாதவூரின் இறைவனான மாணிக்கவாசகரையும், தெய்வப்பெண்ணான ஆண்டாளையும் பணிந்து சேர விருப்பொடு வருக, வீடுபேறாம் துணைக்கு இவர்களைவிட்டால் வேறு வழியில்லை; இவர்களை இப்போதே சேராதவர் எமன் வந்து நெறிக்கும் போது விரைந்து சேர இயன்றாலும் இயலாமல் இவ்வுலக ஞானம் என்ற கடலில் மூழ்கி அதனை தாண்ட இயலாது அதனுள்ளேயே ஆழ்வர் எ-று.

விளக்கம்:
வாதம் - வாதவூர்;
சா - எமன் (ஆகுபெயர்);
அடிகள் வாண் - உருவகம் - அடிகளாகிய வாண், வாண் - வீடுபேறு / உய்வு (ஆகுபெயர்);
போதம் - ஞானம், இவ்வுலக ஞானமாகிய விஞ்ஞானம், இது மாயையையும் பாசத்தையும் சுட்டுகிறது;
ஆழி - கடல்.

நான்காரைச் சக்கர பந்தம்:
இப்பா நான்கு ஆரங்கள் (forks) கொண்ட சக்கரத்தில் அமையுமாற்றைப் படத்தில் காண்க.
சக்கரத்தின் நடுவில் உள்ள குமிழில் (வா) தொடங்கி, ‘1’ என்ற எழுத்திட்ட அம்புக்குறி திசையில் (இடமிருந்து வலமாக) ஆரத்தில் படித்துப் பின் சக்கரவட்டத்தில் கீழிறங்கிப் பிறகு மேல்நோக்கி ஆரத்தில் ‘வா’-வரை படித்துப் பின் வந்த வழியே மீண்டும் ஆரத்தில் (மேலிருந்து கீழாகப்) படித்து... இவ்வாறே முழுச் சக்கரத்தையும் படித்தால் தொடங்கிய இடத்திற்கே வந்து பாடல் சரியாகி முடிந்து சக்கரமாக அமையும்!

சக்கரத்தின் உள்வட்டத்தில் ‘மார்கழி’ என்ற சொல் அமைதலையும் கண்டுணர்ந்து மகிழ்க!

இனிய காலை வணக்கம்...

நன்றி!

(C)2019, Vennkotran.

No comments:

Post a Comment