இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Thursday 19 December, 2019

மார்கழி வெண்பா - 3 - இரட்டுறமொழிதல் (சிலேடை)

#மார்கழி 3

கொழுந்தனாய்க் கண்டு குறைவில்லாப் பாவை
பொழிந்தாரை, வேதப் பொருளை - மொழிந்தாரை
மாறனோ டொப்பாரை மாரனை ஏய்த்தாரை
மாறிலா தென்றும் வணங்கு!


(நேரிசை வெண்பா; மாணிக்கவாசகர் - ஆண்டாள் சிலேடை)

மாணிக்கவாசகர்: 

கொழுந்தனாய் கண்டு - சிவனை தழல் வடிவாய்க் கண்டு (கொழுந்து - நெருப்பு, தழல்; கொழுந்தன் - தழல்வடிவானவன்);
குறைவில்லாப் பாவை பொழிந்தாரை - குற்றமில்லாத திருவெம்பாவை பாடினவரை;
வேதப் பொருளை மொழிந்தாரை - வேதத்தின் நாயகனான சிவனைத் தன் பாக்களில் பாடியவரை;
மாறன் - பாண்டிய மன்னன்
மாறனோடு ஒப்பாரை - பாண்டியனோடு மாறுபட்டாரை (குதிரை வாங்கக் கொடுத்த காசைக் கோயில் கட்ட செலவிட்டார்);
மாரனை ஏய்தாரை - காமத்தை வென்றவரை (மாரன் - மன்மதன், ஆகுபெயராய்க் காமத்தைக் குறித்தது);

ஆண்டாள்:

கொழுந்தனாய்க் கண்டு - திருமாலைத் தன் கணவனாகக் கண்டு (கொழுந்தன் - கணவன்);
குறைவில்லாப் பாவை பொழிந்தாரை - சிறந்த திருப்பாவை பாடினவரை;
வேதப் பொருளை மொழிந்தாரை - ஆழ்வார் பாக்கள் ‘தமிழ் வேதம்’ எனப்படுவன, அவற்றில் ஒன்றான நாச்சியார் திருமொழியைப் பாடியவரை
(திருமால் - வேதப் பொருள், அவனைப் பாடியவர் என்றும் பொருள் கொள்ளலாம்!);
மாறனோடு ஒப்பாரை - நம்மாழ்வாருக்கு இணையாக ’ஆழ்வாரா’க இருப்பவரை (மாறன் - சடகோபராகிய நம்மாழ்வார்);
மாரனை ஏய்த்தாரை - மன்மதனை வேண்டினாரை (ஏய்த்தல் - இணங்கச் செய்தல்; தனது நாச்சியார் திருமொழியில் ’தையொரு திங்கள்’ என்ற முதல் பத்திலேயே ஆண்டாள் திருமாலையே தனக்குக் கணவனாக ஆக்குமாறு மன்மதனை வேண்டிப் பாடுகிறார்!)

மாறு இலாது என்றும் வணங்கு - இவ்விருவரையும் என்றும் மாறாது வணங்கு!


[நான் முதல்நாள் வெண்பாவைப் பகிர்ந்தபோது ‘சைவத்தை முன்வைத்து வைணவத்தைப் பின்வைத்தார்’ என்று ஒரு நண்பன் விளையாட்டாகச் சொன்னான், சரியென்று நான் நேற்று (’தாரணி...’ என்னும் 2ம் பாடலில்) கோதையை முன்வைத்து வாதவூர்க் கோவைப் பின்வைத்தேன்... எதற்கு இந்த முன்பின் வம்பு என்று இருவரையும் ஒன்றாகப் பாடிவிட்டேன் இன்று!]

No comments:

Post a Comment