இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Thursday 26 December, 2019

மார்கழி வெண்பா - 8 - நாற்கூற்றிருக்கை

#மார்கழி 8

ஓரொருவன் ஈர்த்தாளொன் றோரிருப்பே மூளச்செய்
வாரிருவர் கூறொருபா மாண்புரைக்கின் - சேரொரு
மாவிருக்கு முன்னாம் மறைநான்கும் மூவிரண்டாய்ப்
பாவுறுப்பும் ஒன்றுவன பார்!

(நேரிசை வெண்பா; நாற்கூற்றிருக்கை)

பதம் பிரித்து:

ஓர்(1) ஒருவன்(1) ஈர்(2) தாள் ஒன்று(1) ஓர்(1) இரு(2)ப்பே மூ(3)ளச் செய்வார்
இரு(2)வர் கூறு ஒரு(1) பா மாண்பு உரைக்கின் - சேர் ஒரு(1)
மா இரு(2)க்கு முன்(3) ஆம் மறை நான்கு(4)ம் மூ(3) இரண்டாய்(2)
பாவு உறுப்பும் ஒன்று(1)வன பார்

எப்போதும் சிந்திக்கும் (ஓர்) இறைவனது (ஒருவன்) பிறவியை அறுக்கும் (ஈர்) திருவடிகளை (தாள்) சேரும் (ஒன்று) ஒரு நிலையாகிய தன்மையை (ஓர் இருப்பு) பெருகி உண்டாகும்படி (மூள செய்) செய்யும் இருவர் (மாணிக்கவாசகர் & ஆண்டாள்) பாடிய தனித்துவமான பாக்களின் (கூறு ஒரு பா; ஒரு - தனித்தன்மை) பெருமையை (மாண்பு) சொல்வதானால் (உரைக்கின்) ஒரு பெரிய இருக்கு (ரிக் வேதம்) முதலாகிய (முன் ஆம்) தொகுதியாக (சேர்) நான்கு மறைகளும் (ரிக், யசுர், சாம, அதர்வன வேதங்கள்) அவற்றின் அங்கமாக இருக்கும் (பாவு உறுப்பு) ஆறும் (மூ-இரண்டாய்; வேதங்களின் அங்கம் ஆறு, அவை: சிட்சை, வியாகரணம், சந்தசு, நிருக்தம், சோதிடம், கற்பம் என்பன) மட்டுமே நிகரானவை (ஒன்றுவன) என்று அறிக (பார்!).

பொழிப்பு: நாம் எப்போதும் எண்ணும் இணையற்ற இறைவனின் பிறவியை அறுக்கும் தாளைக் கூடுவதான இருப்பை தர வல்ல அந்த இருவரின் பாக்களின் பெருமையைப் பேசுவதானால் அவை இருக்கு முதலாகிய நான்கு வேதங்களும் அவற்றின் அங்கங்களும் மட்டுமே ஈடாக இருக்க வல்லவை என்று அறிக! (மாணிக்கவாசகர் & ஆண்டாளின் பாக்கள் தமிழ் வேதம் ஆகும் என்றவாறு!)


நாற்கூற்றிருக்கை: ஒன்றில் தொடங்கி ஒன்றுவரை ஒவ்வொன்றாய் நான்குவரை எண்ணிக்கை வளர்ந்தும் தேய்ந்தும் வருமாறு சொற்களை அமைத்தல் நாற்கூற்றிருக்கை ஆகும். எண்களைச் சுட்டும் சொற்கள் எண்ணுப் பொருளிலோ அல்லது வேறொரு பொருளைக் குறித்தோ வரலாம்.
எ-டு: ‘ஓர்’ என்பது ஒன்று என்பதைக் குறிக்கும் சொல்லாயினும் இது முதலடி முதல்சீரில் ‘ஓர்தல்’ (எண்ணுதல்) என்ற பொருளில் வந்தது, இதுவே பின்னர் மூன்றாம் சீரில் ‘ஒன்று’ என்ற எண்ணுப் பொருளிலேயே வந்தது. இவ்வாறே ’ஈர் (பிள/2)’‘மூ(ள) (பெருகி உண்டாக்க/3)’, ‘இரு(ப்பு) /2’ எனப் பிறவும் வந்தன. (நாற்கூற்றிருக்கை அமையுமாறு படத்திலும் காட்டப்பட்டுள்ளது!)

திருஞான சம்பந்தர் முதலாய், திருமங்கை ஆழ்வார், நக்கீர தேவ நாயனார் (11ம் திருமுறை), அருணகிரிநாதர் ஆகியோரு ‘திருவெழுகூற்றிருக்கை’ அருளியுள்ளனர். இது ஒன்றில் தொடங்கி ஒவ்வொன்றாய் வளர்ந்து தேய்ந்து ஏழுவரை செல்லும் அமைப்புடையது, இவை பெரும்பான்மை நீண்ட ஆசிரியப்பாக்களால் அமையும். பாம்பன் திருகுமரகுருதாச சுவாமிகள் விருத்தப்பாவில் நாற்கூற்றிருக்கை அருளியுள்ளார்.

நன்றி.

(C) 2019, Vennkotran.

No comments:

Post a Comment