இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Saturday 28 December, 2019

மார்கழி வெண்பா - 12 - இதழகற்பா

#மார்கழி 12

அணிந்தளித்த நல்லணங்கை ஆண்டாளைக் காதல்
கனிந்தளித்தக் கன்னலைக் கள்ளைத் - தணிந்தநதி
ஆடலைச் செய்தற்கன் றாதியா னானைநல்
ஏடியற்றச் செய்தானை ஏல்!

(நேரிசை வெண்பா; இதழகற்பா - நிரோட்டகம்)

பதம் பிரித்து:
அணிந்து அளித்த நல் அணங்கை, ஆண்டாளை காதல்
கனிந்து அளித்த கன்னலை கள்ளை - தணிந்த நதி
ஆடலை செய்தற்கு அன்று ஆதி ஆனானை நல்
ஏடு இயற்ற செய்தானை ஏல்.

பொருள்:
[திருமாலுக்கு மாலையை] தான் சூடிக் கொடுத்த தெய்வப்பெண்ணை (அணங்கு), ஆண்டாளை, [இறைவனுக்குத்] தன் காதலைக் கனிந்து அளித்த கரும்பு போன்ற இனியவளை (கன்னல் = கரும்பு), தேன் போன்றவளை (கள்) (ஏல் - ஏற்றுப் போற்று);
வைகை (நதி) [ஆற்றில் வெள்ளம் வரச் செய்து பின் அது] அமைதியுறுவதான (தணிந்த) திருவிளையாடலை (ஆடலை) [சிவனார்] செய்வதற்கு முன்பு (அன்று) காரணமாய் (ஆதி) இருப்பவனை (ஆனானை = மாணிக்கவாசகனை) [இறைவனையே] நல்ல கோவை என்ற நூலை ஏட்டில் எழுத வைத்தவனை (ஏடு இயற்றச் செய்தானை) ஏற்றுப் போற்று (ஏல்).
(’ஏல்’ என்ற ஏவல் வினை இருபுடையும் நின்றது. இதுவும் நெஞ்சுக்குச் சொன்னது! முன்னிலையும் ஆம்!)



விளக்கம்:
கன்னல், கள் - ஆகியன உவமை ஆகுபெயர்.
பரி நரியான வழக்கில் மாணிக்கவாசகரை பாண்டியன் சிறையிலிட, அவரை மீட்கும் பொருட்டே இறைவன் வைகையில் வெள்ளம் வந்து வடிவதான திருவிளையாடலைச் செய்தருளினான், எனவே அவ்வாடலுக்கு இவரே ஆதி (காரணம்) எனப்பட்டார்!
’பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என்று பொன்னம்பல நாதனே மாணிக்கவாசகரைக் கேட்டு, அவர் பாடியதைத் தன் கைப்படவே ஏட்டில் எழுதி ‘திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து’ என்று கையொப்பமும் போட்டருளினார் என்பது வரலாறு. நூலினது நன்மை ஏட்டின் மேல் ஏற்றி ‘நல் ஏடு’ என்று மொழியப்பட்டது!

இதழகற்பா / நிரோட்டகம்:
‘இதழ்+அகல்+பா’
‘நிர்+ஓட்டகம்’ (’நிர்’ - இன்மை; ’ஓஷ்டம்’ என்பதன் தற்பவம்; ஓஷ்டம் - இதழ் / உதடு)

உதடுகளைக் குவியச் செய்யும் உயிர்களான உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகியனவும், உதட்டின் (அல்லது உதடு+பல்லின்) அசைவால் பிறக்கும் மெய்யெழுத்துகளான ப், ம், வ் ஆகியனவும் வராமல் யாக்கப்படும் பா ‘இதழகற்பா’ அல்லது ‘நிரோட்டகம்’ எனப்படும்.
இப்பாவை உரக்கச் சொல்லிப் பார்த்தால் உதடுகள் அசையாமலே இதனைச் சொல்ல இயல்வதை உணரலாம்!

இனிய காலை வணக்கம்...

நன்றி.

(C) 2019, Vennkotran.

No comments:

Post a Comment