எப்பொழுதோ சிலமுறை கைநீட்டுகையில்
எங்கிருந்தோ வந்தமரும் பட்டாம்பூச்சி ஒன்று
என்னவொரு அழகு என்று நான் மலைத்து
என்னென்ன நிறமென்று எண்ணிமுடிப்பதற்குள்
எட்டாமல் பறந்து கண்ணைவிட்டு மறைந்துவிடும்...
கண்ணில்பட்டு கவனத்தைக் கவரும் நூலொன்று
கருத்துள்ளது என்று என்னைக் கருதிட வைக்கும்
கட்டாயம் வாங்கிப் படித்திட நினைக்கையில்
கைக்குக் கிட்டாமல் காணாது போகும்...
எங்கோ எப்பொழுதோ கேட்டிருப்போம்
என்றும் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கும்
மறந்துவிடுமா அத்தனை எளிதில்
மனதிற்கு பிடித்துவிட்டப் பாடல் என்றால்...
நொடியில் பிரிந்த பட்டாம்பூச்சியாய்
நானின்னும் படிக்காத நல்ல நூலாய்
நண்பா நீ சிலநாட்களில் பிரிந்துவிட்டாலும்
நினைவில் நிலைக்கும் இனிய பாடலாய்
நீங்காது நிற்பாய் என் மனதில்...
எங்கும் போய்விட முடியாது
என் நினைவைவிட்டு நீ
வரும் பல நாட்கள் நாம் மீண்டும் சந்திக்க
வருவேன் அப்பொழுதெல்லாம் நானும்
காத்திருக்கையில் கிறுக்கிய
கவிதைக் கையுறைகளுடன்!
நல்ல பொருத்தமான உவமைகள். ஆனால் சொற் சிக்கனம் வேண்டும். பழகுங்கள்.
ReplyDelete