அம்மா அப்பா பாசத்தை
வளர வளர வரித்துக் கொண்டாய்
வருவோர் போவோர் கவனத்தை
எனக்கு மட்டுமே இருந்தவைகளில்
உனக்கும் ஒரு பங்கு உண்டானது
விளையாட நான் செல்லும்பொழுதெல்லாம்
விடாமல் வந்து இம்சித்தாய் நீ
உன்னைப் பார்த்துக்கொள்வதில் பலநாள்
என்னைவிட்டு சென்றது என் சுதந்திரம்
என்ன இருந்தாலும் எனக்கு நீ
அண்ணன் என்ற பதவி தந்தவன்
அன்பும் இருக்கிறது உன்னிடம்
அடிக்கடி அது வெளிப்படும்
உன்னைப் பார்த்துக்கொள்வதில் நானும்
வளர்த்துக்கொண்டேன் என் பொறுப்புணர்ச்சியை
விளையாட்டில் என்னோடு ஜோடிசேர
சளைக்காமல் இருந்தாய் நீ என்றும்
என் இரகசியங்களை போட்டுவைக்க
உன் காதுகள் இருந்தன எனக்கு
எத்துனை செய்துள்ளோம் சேர்ந்து நாம்
அத்துனையும் தெரியாதே இன்னும் அம்மாவிற்கு
அடித்தாலும் புடித்தாலும் உன்னை
பிடிக்காமல் போனதில்லை எனக்கு
சண்டையின் நாட்களுக்கு இடையில்
சந்தோஷத்தின் நிமிடங்களும் உண்டே
”நீ என் தம்பியே இல்லை!” என்று திட்டியதையும்
நீக்கிவிடுகிறோம் நினைவிலிருந்து எளிதாய்
சண்டை நூல்களில் குறும்பு இழைகள் ஊடிய
நினைவுத் துணியை நெய்து உடுத்தியவர் நாம்
ஆர அமர இருந்து
ஆளுக்கொன்றாய் பகிர்ந்து
”பலமுறை உன்னையும் பிடிக்காது எனக்கு
சிலமுறை நிரம்ப பிடிக்கும் உன்னை!” என்று
கூச்சத்தில் நெளிந்து பாசத்தில் நெகிழ்ந்து
தடுக்கும் ஆணவத்தை தவிர்த்துவிட்டு சொல்வாய்
புன்னகையில் ஒத்துக்கொள்வேன் நானும்
என் தம்பியாய் நீ கிடைத்தது தவம்தான் என்று!
பி.கு: இந்தக் கவிதைக்கு மட்டுமின்றி என் வாழ்க்கைக்கும் ஒரு கருப்பொருளாய் இருக்கும் என் தம்பி திரு.விக்ரம்-கு இது உரித்து!
சந்தோஷம்
ReplyDeleteஎன் தம்பிக்கிட்டயும் இதைச் சொல்லணும் போல இருக்கு. இப்ப என் பொண்ணு அவ தம்பியைப் பாத்து இதைச் சொல்வாளோ என்னவோ?! அதுவும் முக்கியமா இந்த பொறுப்புணர்வால வர்ற சுதந்திரப் பறிப்பு! அவளுக்கு பிடிக்கவே இல்லை அது.
ReplyDelete