பாலை வனத்தினிலே - மிகப்
பசித்து வேட்கையுற்றே
மேலை திரிந்திருந்தார் - ஒரு
மீட்சி தரவல்லபூஞ்
சோலை கண்டதைப் போல் - எங்கள்
சோர்வைத் தணித்திடவே
ஆலிலை பள்ளிவிட்டு - எங்கள்
அகத்தினுள் வந்தவனே...
வாய்க்குள் விரலைவிட்டே - என்றன்
மடியில் உறங்குமுன்றன்
வாயின் கடையொழுகும் - எச்சில்
வாழ்வை நனைக்குதடா!
சாய்ந்தென் தோளுறங்கும் - போதுன்
தாள்கள் மார்புதைத்தால்
பாயும் காவிரியாய் - உயிரில்
பாசம் பெருகுதடா!
உண்ண மறுத்தலையும் - உன்பின்னால்
ஓடிக் களைப்பதிலும்,
மண்ணை எடுத்துண்ணும் - உன்வாயை
வழித்துத் துடைப்பதிலும்,
கண்முன் உனைநிறுத்தி - வீட்டுக்
காரியஞ் செய்வதிலும்
எண்ணும் உவகையுண்டு - அதனை
எடுத்துச் சொல்வதில்லை!
வீதிச் சிறுவருடன் - நிதம்நீ
விளையாடச் செல்கையிலே
வாது வழக்குபல - உன்மேல்
வந்துவந் துரைத்திடுவார்!
ஏதெனக் கேட்கையிலே - கள்ளம்
ஏதுமில் லாதவன்போல்
கோதில் நகைபுரிவாய் - உள்ளம்
குழைந்துள் உருகுமடா!
பாட சாலைசெல்லும் - உனைநான்
பரிந்து பார்த்திருப்பேன்,
ஏடும் ஆணிகளும் - ஒருகை
ஏந்த, மறுகையிலே
சீடை முறுக்குவெல்லம் - பெரிய
செம்பு நிறையவெண்ணெய்
ஆடை மீதுசிந்த - மகிழ்வாய்
ஆடி நடந்திடுவாய்...
உதித்த நாளுனைநான் - எனது
உள்ளங் கைகளுக்குள்
மெதுவாய் ஏந்திநின்ற - நினைவே
விரியும் மனத்தினுக்கே
வதுவை தேடுமொரு - நெடிய
வாலிபனாய் வளர்ந்த
விதங்கள் புரிவதில்லை - உனையே
வியந்து பார்த்திருப்பேன்...
விதைத்த மரநிழலில் - விதைத்தோர்
மெச்சி உறங்குதல்போல்
மதலை உன்னணைப்பில் - மிகவே
மனத்தில் அமைதிகொள்வோம்...
பதையா தெங்களுள்ளம் - காலன்
பாசக் கயிறிடினும்,
இதமாய் விடைபெறுவோம் - கண்ணன்
எங்கள் அமுதமன்றோ?!
***
உரைத்த பெருங்கனவைக் - கண்ணா!
உண்மை ஆக்கிடவா!
நுரையின் சிற்பமெனத் - தினமும்
நொறுங்கும் வாழ்வினிலே
கரையும் மனமுனக்காய்! - கண்ணா!
காலம் நீளவிடாய்!
இரைகின்றேன் உனக்காய்! - கண்ணா!
இனிமை நிரைத்திடவா!
-வெண்கொற்றன்
(C) Vijayanarasimhan, 2022.
No comments:
Post a Comment