இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Friday 19 August, 2022

கண்ணன் எம் குழந்தை


 

பாலை வனத்தினிலே - மிகப்
    பசித்து வேட்கையுற்றே
மேலை திரிந்திருந்தார் - ஒரு
    மீட்சி தரவல்லபூஞ்
சோலை கண்டதைப் போல் - எங்கள்
    சோர்வைத் தணித்திடவே
ஆலிலை பள்ளிவிட்டு - எங்கள்
    அகத்தினுள் வந்தவனே...

வாய்க்குள் விரலைவிட்டே - என்றன்
    மடியில் உறங்குமுன்றன்
வாயின் கடையொழுகும் - எச்சில்
    வாழ்வை நனைக்குதடா!
சாய்ந்தென் தோளுறங்கும் - போதுன்
    தாள்கள் மார்புதைத்தால்
பாயும் காவிரியாய் - உயிரில்
    பாசம் பெருகுதடா!

உண்ண மறுத்தலையும் - உன்பின்னால்
    ஓடிக் களைப்பதிலும்,
மண்ணை எடுத்துண்ணும் - உன்வாயை
    வழித்துத் துடைப்பதிலும்,
கண்முன் உனைநிறுத்தி - வீட்டுக்
    காரியஞ் செய்வதிலும்
எண்ணும் உவகையுண்டு - அதனை
    எடுத்துச் சொல்வதில்லை!

வீதிச் சிறுவருடன் - நிதம்நீ
    விளையாடச் செல்கையிலே
வாது வழக்குபல - உன்மேல்   
    வந்துவந் துரைத்திடுவார்!
ஏதெனக் கேட்கையிலே - கள்ளம்
    ஏதுமில் லாதவன்போல்
கோதில் நகைபுரிவாய் - உள்ளம்
    குழைந்துள் உருகுமடா!

பாட சாலைசெல்லும் - உனைநான்
    பரிந்து பார்த்திருப்பேன்,
ஏடும் ஆணிகளும் - ஒருகை
    ஏந்த, மறுகையிலே
சீடை முறுக்குவெல்லம் - பெரிய
    செம்பு நிறையவெண்ணெய்
ஆடை மீதுசிந்த - மகிழ்வாய்
    ஆடி நடந்திடுவாய்...

உதித்த நாளுனைநான் - எனது
    உள்ளங் கைகளுக்குள்
மெதுவாய் ஏந்திநின்ற - நினைவே
    விரியும் மனத்தினுக்கே
வதுவை தேடுமொரு - நெடிய
    வாலிபனாய் வளர்ந்த
விதங்கள் புரிவதில்லை - உனையே
    வியந்து பார்த்திருப்பேன்...

விதைத்த மரநிழலில் - விதைத்தோர்
    மெச்சி உறங்குதல்போல்
மதலை உன்னணைப்பில் - மிகவே
    மனத்தில் அமைதிகொள்வோம்...
பதையா தெங்களுள்ளம் - காலன்
    பாசக் கயிறிடினும்,
இதமாய் விடைபெறுவோம் - கண்ணன்
    எங்கள் அமுதமன்றோ?!

***

உரைத்த பெருங்கனவைக் - கண்ணா!
    உண்மை ஆக்கிடவா!
நுரையின் சிற்பமெனத் - தினமும்
    நொறுங்கும் வாழ்வினிலே
கரையும் மனமுனக்காய்! - கண்ணா!
    காலம் நீளவிடாய்!
இரைகின்றேன் உனக்காய்! - கண்ணா!
    இனிமை நிரைத்திடவா!

-வெண்கொற்றன்

(C) Vijayanarasimhan, 2022.

No comments:

Post a Comment