இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Sunday 7 November, 2010

இயற்பியலாளனும் கவிஞனும் புலவனும்...

[இயற்பியலாளனின் காதல், கவிஞனின் வெளிப்பாடுகள், புலவனின் யாப்புப்பெயர்ப்புகள்!]
உன்
இருத்தலின் ஈர்ப்புவிசையில்
என்
நொடிக்கூறும் நாட்களாகிறது
கணங்களின் கனத்தில்
கனமிழக்கிறது மனது!
[இன்னிசை வெண்பா]
உந்தன் இருத்தலின் ஈர்ப்பு விசையில்
எனது நொடிக்கூறும் நாட்களாய் ஆக
கனக்கும் கணங்களில் தானும் இழக்கிறது
தன்கனத் தைஎன் மனது.


விழியென்னும்
கருப்புக் குழி
விழுங்கி விடுகிறது
என்
பார்வை ஃபோட்டான்களை!

[குறள் வெண்பா]
விழுங்குது என்பார்வை ஃபோட்டான் களைத்தான்
விழியின் கருப்புக் குழி!


நினைவின் அழுத்தமும்
நீதரும் வெப்பமும்
நிகழ்த்திவிடுகின்றன மனதுள்
அணுக்கரு வினைகளை...
பெருகும் வினைகள்
தருகின்ற ஆற்றலில்
பிறக்கின்றது மனது
புதியதொரு விண்மீனாய்!

[இன்னிசை வெண்பா]
நினைவின் அழுத்தமும் நீதரும் வெப்பமும்
என்னுள் நிகழ்த்தும் அணுக்கரு கூட்டு
வினையால் புதியதோர் விண்மீனாய் என்மனம்
அன்பே பிறக்குது இன்று!


நீ கதிரானால் தான் கோளாய்
நீ கருவானால் தான் மின்னாய்
சுற்றிக் கொண்டே இருக்கும்
உன்னையே என் மனம்!

[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]
கதிரானால் கோளாய் கருவானால் மின்னாய்
எதுவானா லுமதற்(கு) ஏற்பவே தானுமென்றும்
உன்னையே சுற்றும் மனது!

நீர் ஆவியாகும்
வெப்பத்தில் என்பது
இயற்பியல்,
என்
ஆவி நீராகிறதே
உன்
பார்வை வெப்பத்தில்
இது என்ன
முரணியலா?

[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]
நீராவி ஆகும் நெருப்பில் இயற்பியல்
நீபார்க்க என்னாவி நீரா கிறதே
முரணியலா என்ன இது?

உன்
காந்தக் கருவிழியில்
மூழ்கும் என்
கண் கடத்திகளில்
பிறக்கிறது
காதல் மின்சாரம்!

[குறள் வெண்பா]
காந்தக் கருவிழியில் கண்கடத்தி மூழ்கிட
பாய்ந்து பரவுது மின்.

உன்னை
உயிர் என்பதா?
அதுவும் ஒருநாள்
பிரிந்திடுமே...
என்றும் பிரியாதவளே
உன்னைத்
’தமிழ்’ என்பேன் நிலைத்து!

[நேரிசை வெண்பா]
உன்னை உயிரெனவோ ஓர்நாள் அதுவும்தான்
என்னைப் பிரியும் இனியவளே – என்றென்றும்
என்னைப் பிரியா(து) இருப்பவளே இன்னமுதே
உன்னைத் தமிழென்பேன் நான்!

4 comments:

  1. அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.
    //நீர் ஆவியாகும்
    வெப்பத்தில் என்பது
    இயற்பியல்,
    என்
    ஆவி நீராகிறதே
    உன்
    பார்வை வெப்பத்தில்
    இது என்ன
    முரணியலா//

    //நினைவின் அழுத்தமும்
    நீதரும் வெப்பமும்
    நிகழ்த்திவிடுகின்றன மனதுள்
    அணுக்கரு வினைகளை...
    //

    ஆனால்
    அழுத்தமும், வெப்பமும் அணுக்கரு வினையை பாதிக்குமா?
    இயற்பியலாளரே..

    ReplyDelete
  2. உமக்குள் இருக்கும் இயற்பியல் வெப்பம்
    அழுத்தத்தாலா? இல்லை அணுக்கரு வினையினாலா?
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

    நான் வலைப்பூவிற்கு புதியவன். எனது வலைப்பூ குறித்து உங்கள் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.
    inbamazhai.blogspot.com

    ReplyDelete
  3. பாரத் பாரதி...
    அழுத்தமும் வெப்பமும் அணுக்கரு வினையை (அணுக்கரு பிணைவு - Nuclear Fusion) பாதிக்குமா என்பதை விட, [விண்மீன்களைப் பொறுத்தவரை] அவைதான் அவ்வினை துவங்குவதற்கும் நிகழ்வதற்கும் காரணிகளாக அமைபவை. இரு அணுகருக்கள் இணையும் அளவிற்கு நெருங்க வேண்டுமானால் அதற்கு அளப்பரிய விசை வேண்டும் (காரணம் நேர்மின் திறன் கொண்ட இரண்டு அணுக்கருக்கள் அருகருகில் வருகையில் அவைகளுக்கிடையே மின்புலத்தின் விலக்குவிசை செயல்படும், இந்த விலக்குவிசையையும் மீறி அவைகளை நெருங்கச் செய்ய அதைவிட வலுவான வேறொரு விசை வேண்டும்) இது நிறைய அணுக்கள் ஒரே புள்ளியில் திரள்வதால் உண்டாகும் ஈர்ப்புவிசை அழுத்தத்தால் கிடைக்கிறது. சாதாரண விண்கற்கள் (அல்லது துகள்கள்) தத்தமது ஈர்ப்புவிசையால் நெருங்கி சுருங்கி ஒரு கோளமாகி, மேலும் மேலும் துகள்கள் அக்கோளத்தோடு ஈர்த்துச் சேர்க்கப்பட்டு, இதன் விளைவாய் கோளத்த்தின் மையத்தில் அழுத்தமும் வெப்பமும் அதிகரித்து, குறிப்பிட்ட அளவைத் தாண்டுகையில் மையத்தில் அணுக்கரு பிணைவு வினை துவங்கும்... அக்கோளம் ஒரு விண்மீனாய் (நட்சத்திரமாய்) மாறும்! [அப்பாஆஆஆ... ஒரு சின்ன கேள்விக்கு இவ்ளோ பெரிய விளக்கமா... மன்னிச்சுக்குங்க - எனக்கு (உரைநடைல) சுருக்கமா சொல்லத் தெரியாது!]

    தளத்திற்கு வந்து கவிதைகளைப் படித்தமைக்கு மிக்க நன்றி... எனக்கு மிகப் பிடித்த கவிஞனின் பெயரைக் கொண்டுள்ளீர்கள் [நான் பாரதி வழியில், அவரை “காப்பி” அடித்து சில பாடல்கள் எழுதி வருகிறேன், அவற்றிற்கு தங்களில் தீவிர விமர்சனம் தேவை...:-) ], தொடர்ந்து வரவும்... நன்றிகள்!

    ReplyDelete
  4. சுதீர் ஜி.என்...

    ஐயா, கவிதைகளைப் படித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி... தாங்களும் ஒரு இயற்பியலாளர் என்பதை அறிகையில் மேலும் மகிழ்கிறேன்... தொடர்ந்து தங்கள் ஆதரவை அளிக்கவும்... [தங்களின் வலைப்பூவைக் கண்டேன், அழகாய் உள்ளது... பொறுமையாக முழுமையாகப் படித்து என் கருத்துக்களை இடுகிறேன்...]

    நன்றி!!

    ReplyDelete