நான்
கிராமங்களையும், வயல்களையும், தோட்டங்களையும் எப்போதோ நண்பர், உறவினர்
வீட்டுக்கு போகும் பொழுது மட்டுமே பார்த்தவன், ஒரு ஆர்வத்தில் மட்டுமே இந்த
பாடல்களை எழுதி இருக்கிறேன், ஏதேனும் ”டெக்னிக்கல்” தவறு இருந்தால் அசல்
கிராமவாசிகள் மன்னிப்பார்களாக...
காக்கா கொஞ்சிவாழும் காவலில்லாத் தோட்டதுல
காந்தள் கையால களை
புடுங்கிப் போடும் பெண்ணே
காந்தள் கையால களை
புடுங்கிப் போடையில் என்
காதல் மனசதையும் நீ
புடிங்கிப் போவதென்ன... (1)
குயிலுக
குடியிருக்கும் குண்டுமல்லித் தோட்டதுல
குறும்புக் கையால
குச்சி நட்டு வைக்கும் பெண்ணே
குறும்புக் கையால
குச்சி நட்டு வைக்கையில் உன்
குறுக்கு அசைவுல என்
நெஞ்சைக் குத்திப் போவதென்ன... (2)
பாசி படிஞ்சிருக்கும்
பசலைக்கீரைத் தோட்டதுல
பாகுக் கையால பாத்தி
கட்டிப் பார்க்கும் பெண்ணே
பாகுக் கையால பாத்தி
கட்டிப் பார்க்கையில் உன்
பார்வை கயிறால் என்
நெஞ்சைக் கட்டிப் போவதென்ன... (3)
சேறு
சேர்ந்திருக்கும் செழுங்கழனி வயலுக்குள்ள
சேம்புக் கையால
செந்நெல்லு விதைக்கும் பெண்ணே
சேம்புக் கையால செந்நெல்லு
விதைக்கையில் உன்
சேலை மடிப்பில் என்னைச்
சேர்த்து விதைச்சு போவதென்ன... (4)
வாளை வாழும் வயல்
வெளஞ்ச நெல்ல வெய்யிலுல
வாழைக் கையால வாரிப்
போட்டு வாட்டும் பெண்ணே
வாழைக் கையால வாரிப்
போட்டு வாட்டையில் உன்
வாய்ச்சொல் பேசாமல்
என்னை வாட்டிப் போவதென்ன... (5)
நிழலா பின் தொடர்ந்து
உன்னோட நானும் வர
நின்னு பார்க்காம
நெடுநடையாப் போற பெண்ணே
நின்னு பார்க்காம
நெடுநடையாப் போனாலும்
நிற்கக் கெஞ்சும்
உந்தன் மனசின் காதல் புரியுமடி...
- எனக்குப் புரியுமடி
நிலவே உந்தன் காதல் எனக்கு நல்லா புரியுமடி... (6)
No comments:
Post a Comment